அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங்
ராஞ்சி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 30-ல் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
தற்போது தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இத்தேர்தல் பிரசாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் நிச்சயம் கட்டுவோம். இதனைத் தடுக்க உலகில் எந்த ஒரு சக்தியாலும் முடியாது. 1952-ம் ஆண்டு ஜனசங்க தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நாட்டில் 2 அரசியல் சாசனங்கள் இருக்க முடியாது என கூறியிருந்தார்.
அதேபோல் ஒரு தேசத்தில் 2 பிரதமர்கள், 2 கொடிகள் இருக்க முடியாது என்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கூறியிருந்தார். தற்போது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கியதன் மூலம் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம்.
லோக்சபா தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.