பஞ்சாபில் தீவிரவாதிகள் யாரையும் பிணையக்கைதிகளாக பிடிக்கவில்லை: உள்துறை அமைச்சர் ரிஜிஜு
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தினாநகரில் தீவிரவாதிகள் யாரையும் பிணையக்கைதிகளாக பிடிக்கவில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகர் காவல் நிலையம் மற்றும் பேருந்து ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பொதுமக்கள் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று முதலில் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில்,
பஞ்சாபில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் தீவிரவாதிகள் யாரையும் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம். தகவல் கிடைத்ததும் தெரிவிக்கிறோம். பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே தினாநகர் காவல் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். அந்த கட்டிடத்திற்குள் எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர் என்று தெரியவில்லை. பஞ்சாப் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.