மன்மோகன் சிங்கை விமர்சித்ததற்காக மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை: வெங்கையா நாயுடு திட்டவட்டம்
டெல்லி: மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்க நாள் முதலே காங்கிரஸ் எம்.பிக்கள் மன்மோகன்சிங் விமர்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் மீண்டும் அவை கூடிய நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கடும் எரிச்சலடைந்த அவைத்தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு, இவ்விவகாரத்தில் யாரும் மன்னிப்பெல்லாம் கேட்கப்போவதில்லை என்று கோபமாக தெரிவித்தார். நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் மாநிலங்களவையை கேலிக்கூடாரமாக்க வேண்டாம் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.
குஜராத் தேர்தலின் போது தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, பாஜகவை அழிக்கவும், தேர்தலில் தோற்கடிக்கவும் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுடன் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
இவ்விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பிக்கள், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரு அவைகளிலும் கோஷங்களை எழுப்பினர். மாநிலங்களவையில் எம்.பிக்களின் தொடர் அமளியால் கோபமடைந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் பேசவில்லை என்றும், அதனால் அவரோ அல்லது அவரின் சார்பாகவோ யாரும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.