கடலை ரசிக்கலாம்னு போனா குடலை உருவிருவாங்க போலயே!
மங்களூர்: கடலோரக் கர்நாடகம் அவ்வளவு அழகானது.. ஆனால் அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பார்கள். அதை மெய்ப்பிப்பது போல கடலோர கர்நாடக மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறதாம். ஒரு ஆண்டில் மட்டும் அங்கு 217 கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தட்சின் கன்னடா (தென் கன்னடா), உடுப்பி, உத்தர கன்னடா (வட கன்னடா) ஆகிய மாவட்டங்கள்தான் கடலோரக் கர்நாடக மாவட்டங்களாகும். இயற்கை எழில் கொஞ்சும் அருமையான பகுதி இது.
ஆனால் இன்று ரத்தம் உறிஞ்சும் காட்டேறிகள் வலம் வரும் தலமாக மாறியுள்ளன இந்த மாவட்டங்கள். 2014 நவம்பர் முதல் இந்த நவம்பர் மாதம் வரையிலான ஒரு வருட காலத்தில் அங்கு 217 கொலைகள் நடந்துள்ளனவாம்.
2014ல்
2014ம் ஆண்டு மட்டும் அங்கு 100 கொலைகள் நடந்துள்ளன. 2015ம் ஆண்டு இதுவரை 117 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
டான் கொலை 4 தான்
இதில் தாதாக்கள், ரவுடிகளுக்கிடையே நடந்த கொலை 4 மட்டுமே. எனவே கொலையானவர்களில் பெரும்பாலானோர் சாதாரணர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தாதாக்கள் ராஜ்ஜியத்தில்
இத்தனைக்கும் கடலோர கர்நாடக மாவட்டங்களில் தாதாக்கள் ஆதிக்கம் அதிகம். ஆனால் அவர்கள் அதிகம் சாகாமல், அப்பாவிகளும், பிறரும் அதிக அளவில் கொலையாகியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
341 பேர் கைது
217 கொலைகள் தொடர்பாக இதுவரை 341 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2014ல் நடந்த 100 கொலைகள் தொடர்பாக 196 பேரும், 117 கொலை தொடர்பாக 145 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு ரோந்து அதிகரிப்பு
கொலைகள் குறையாமல் தொடர் கதையாகி வருவதால் கடலோரப் பகுதி்களில் இரவு நேர ரோந்தை அதிகரிக்குமாறு கர்நாடக அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம். மேலும் கடலோரக் கிராமங்களில் அதிக அளவில் போலீஸார் உளவு பார்க்கவும் ஆரம்பித்துள்ளனராம்.
கடலை ரசிக்கலாம்னு போனா குடலை உருவிருவாங்க போலயே!