இனி பேப்பர் ஹால்டிக்கெட்டுக்கு பதில் ஆன்லைன் ஹால்டிக்கெட்- யுபிஎஸ்சி அறிவிப்பு
டெல்லி: சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளுக்கு காகித வடிவிலான நுழைவுச்சீட்டு கிடையாது. பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், உள்ளிட்ட இந்திய குடியாட்சி பணிக்குரிய அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடத்துகிறது.
முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதன்மை தேர்வு 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 23 மையங்களில் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த முதன்மை தேர்வினை எழுத இருப்பவர்களுக்கு, காகித வடிவிலான நுழைவுச்சீட்டினை வழங்குவதில்லை என்று மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதன்மைத் தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு மின்னணு நுழைவுச்சீட்டு, யு.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதை தேர்வு எழுத இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து, அச்சு வடிவத்தில் பிரதி எடுத்துக்கொள்ளவும். அவர்கள் தேர்வு எழுதவருகிறபோது அந்த அச்சு பிரதியை தேர்வு அறைக்கு எடுத்து வரவேண்டும். மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தால் காகித வடிவிலான நுழைவுச்சீட்டு தரப்பட மாட்டாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.