செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் அரசியல் நோக்கம் இல்லை: இஸ்ரோ தலைவர் மறுப்பு
பெங்களூர்: செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் அரசியல் நோக்கம் இல்லை என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-1 விண்வெளி திட்டம் நிறைவேறிய பிறகு இஸ்ரோ செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது. இது இந்தியாவின் முக்கிய விண்வெளி திட்டமாக கருதப்படுகிறது. சந்திரயான்-1 விண்வெளி திட்டம் நிறைவேறிய பிறகு இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், தன்னை "நிலா மனிதன்" என்று அடையாளப்படுத்தி கொண்டார். அதேபோல், இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனை தன்னை "மார்ஸ் மேன்" என அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது...
குழுவில் ஒருவன்...
நான் இஸ்ரோ நபராக இருக்கவே விரும்புகிறேன். இஸ்ரோ குழு தான் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டங்களை செய்கிறது. அந்த குழுவில் நான் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.
தேர்தலும், விண்கலமும்...
தேர்தல் நேரம் என்பதால் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறுவது சரியல்ல. இது மிக முக்கியமான விண்வெளி திட்டம் ஆகும். இது நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும். இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இல்லை.
விண்வெளித்திட்டங்கள்...
1962-ம் ஆண்டில் இருந்து விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் அரசியல் நோக்கம் கற்பிக்கப்படவில்லை.
தடுத்து நிறுத்த இயலாது....
விண்வெளி திட்டங்களை ஒரு அரசு தொடங்குகிறது. மற்றொரு அரசு அதை செய்து முடிக்கிறது. விமர்சனங்கள் எப்போதும் இருக்கிறது. ஆனால் இத்தகைய திட்டங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
அரசியல் இல்லை....
விண்வெளி திட்டங்கள் முடித்தவுடன் அதை விண்ணில் செலுத்த சில காலம் ஆகும். கால அட்டவணையை அரசியல் ரீதியாக நிர்ணயிப்பது இல்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.