விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க மத்திய அரசு முடிவு!
விளையாட்டு சங்கங்களில் இருந்து அரசியல்வாதிகளை விரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: நாட்டின் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் இடம்பெறுவதைத் தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டு சங்கங்கள் நீண்ட காலமாக அரசியல்வாதிகள் கையில்தான் இருக்கின்றன. கிரிக்கெட் சங்கங்களுடன் அரசியல்வாதிகளான சரத்பவார், பரூக் அப்துல்லா, ராஜீவ் சுக்லா, ஜோதிராதித்ய சிந்தியா, கால்பந்து சங்கத்துடன் பிரபுல் படேல் என பெரிய பட்டியலே நீள்கிறது.
லோதா கமிட்டி
டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் தற்போதைய மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி நிர்வாகியாக இருந்த போது முறைகேடு நடந்தது என ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியிருந்தது. மேலும் ஐபிஎல் முறைகேடு தொடர்பான லோதா கமிட்டி உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
அரசியல்வாதிகளுக்கு தடை
அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாக அமைப்பில் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் இடம்பெறுவதைத் தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் உருவாக்கி இருந்தது.
வீரப்ப மொய்லி கேள்வி
அப்போது காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி, எதற்காக அரசியல்வாதிகள், விளையாட்டு அமைப்புகளில் இடம்பெற வேண்டும்? இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இது தொடர்பாக சட்டம் கொண்டுவர தாம் முயற்சித்த போது அமைச்சர்கள் பலருமே இதை எதிர்த்தனர் என்றும் போட்டுடைத்திருந்தார்.
மத்திய அரசு அதிரடி
இந்நிலையில் விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகள் இடம்பெறுவதை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.