தாஜ்மகாலுக்கு இந்த கதியா? - காதல் சின்னத்தின் பரிதாப நிலையை பாருங்கள்
தாஜ்மகாலைப் பராமரிக்க எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
டெல்லி : தாஜ்மகாலைப் பராமரிக்க எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்று மத்திய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் தாஜ்மகாலின் நிலை
குறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
17ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரால் கட்டப்பட்ட தாஜ்மகால், காதலின் சின்னமாகப் போற்றப்பட்டு வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மகாலைப் பார்வையிட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள். உ.பி.,யின் சுற்றுலா வருவாயில் கணிசமான பங்கு தாஜ்மகால் அளிப்பதே.
கடந்த சில நாட்களாகவே தாஜ்மகால் பற்றிய செய்தி தான் தேசிய அளவில் பேசு பொருளாக உள்ளது. உத்திர பிரதேச அரசால் வெளியிடப்பட்ட சுற்றுலா கையேட்டில்
தாஜ்மகால் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டு இருந்தது தான் முதல் செய்தி. அதை முக்கிய எதிர்க்கட்சிகள் கண்டித்தனர்.
இது குறித்து கேள்வி ஒன்றில், தாஜ்மகால் இந்திய வரலாற்றிற்கு ஏற்பட்ட கறை என்றார் பா.ஜ.க பிரமுகர் ஒருவர்; முகலாய அரசர்கள் துரோகிகள் அவர்கள் கட்டிய நினைவுச்சின்னம் எதற்கு என்கிறார் பா.ஜ.க எம்.பி; ஆக்ராவில் இருந்த இந்துக்கோவிலை இடித்தே தாஜ்மகால் கட்டி இருக்கிறார்கள் என்கிறார் உ.பி சட்டமன்ற உறுப்பினர் இப்படியாக தாஜ்மகாலைக் குறிவைத்து கடந்த சில நாட்களாகத் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று மத்திய சுற்றுலாத் துறைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், தாஜ்மகால் உள்ளிட்ட நாட்டின் பாரம்பரிய புராதான
கட்டிடங்களைப் பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் குதுப்மினார், ஜந்தர் மந்தர், சூரிய நாராயண கோவில் உட்பட 14
இடங்களைப் பராமரிக்க 7 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
தாஜ்மகாலைப் பாரமரிக்க எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆக்ராவைச் சுற்றி இருக்கும்
தொழிற்சாலைகளினால் தாஜ்மகாலின் தூய்மையான வெண்மை நிறம் மங்கிப்போய் இருக்கிறது.
முறையான பராமரிப்புப் பணிகள் இல்லையென்றால் தாஜ்மகால் என்ன ஆகுமோ என்கிற அச்சம் தாஜ்மகால் காதலர்களிடையே தற்போது எழுந்துள்ளது. அரசு இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.