ரூ.2000-த்தை திரும்ப பெறும் திட்டம் இல்லை... மத்திய இணையமைச்சர் சந்தோஷ் குமார் சுங்வார்
ரூ. 2000 நோட்டை திரும்ப பெறும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்: ரூ. 2000 நோட்டை வாபஸ் பெறும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய இணையமைச்சர் சந்தோஷ் குமார் சுங்வார் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு பதிலாக புதிய ரூ.500, 2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து புதிய ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெறப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதை மத்திய அரசு மறுத்தது.
சமீபத்தில் புதிதாக ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தி விட்டது என செய்திகள் வெளியாகின. புதிய ரூ.200 நோட்டுக்களை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதால் ரூ.2000 நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் சுங்வார் கூறுகையில், ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது குறைந்து விட்டதாக கூறப்படுவது வேறு விஷயம். அதை முதலில் ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கும். ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும். அவை மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு கடந்த மாதமே தயாராகி விட்டது. அந்த நோட்டுகள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) புழக்கத்துக்கு விடப்படும் என்றார்.