ஆந்திராவை பிரிப்பதால் ஒரு பயனும் இல்லை: முதல்வர் கிரண் குமார் ரெட்டி
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆந்திராவை பிரிக்கும் விவகாரத்தில் எனது கருத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். தெலுங்கானாவை தனிமாநிலமாக்க நான் சம்மதித்துவிட்டதாக திக்விஜய் சிங் கூறியதில் உண்மை இல்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம். ஆனால் மாநிலத்தை பிரிப்பதை நான் ஏற்கவே மாட்டேன். ஆந்திராவை பிரிப்பதால் மாநிலத்திற்கு எந்த பலனும் இல்லை.
மாநிலத்தை பிரிக்கும் முன்பு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும். ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று கூறி வருவது எந்த பகுதி மக்களின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல என்றார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கும் விஷயத்தில் கிரண் குமார் ரெட்டி சமரசமாகிவிட்டார். அவர் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்பட மாட்டார் என்றார்.