சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்காரி உறுதி
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் மத்திய கப்பல் மற்றும் நெடுங்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி.
இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் இருந்து வரும் கப்பல்கள் கிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்களை அடைவதற்கு இலங்கையைச் சுற்றி வர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
இதனால் அதிக எரிபொருள் செலவு மட்டுமின்றி நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே இதை தடுப்பதற்காக பாக் நீரிணை பகுதியில் சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் கடலை ஆழப்படுத்தி பெரிய கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்துவதற்கும், இந்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகங்களை ஏற்படுத்தவும் மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை உருவாக்கியது.
ஆனால், கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என ஏராளமான இந்து அமைப்புகள் இத்திட்ட்த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பாக மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்ச்ர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசு பதவியேற்று 100 நாள் முடிவடைந்ததையொட்டி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாற்று வழிகள்...
இந்து மதத்தின் முக்கியத்துவம் கருதி, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு துறைகளில் மாற்று வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நிறுவனம் (ரைட்ஸ்) ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
ரைட்ஸ் நிறுவனம்...
அதன்படி நாங்கள் சேது சமுத்திர திட்டத்தை ‘ரைட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.
மாற்று வழிகள்...
இந்த திட்டம் தொடர்பாக அந்த நிறுவனம் அளித்துள்ள மாற்று வழிகள் அனைத்தும் பரிசீலனைக்காக மத்திய அமைச்சரவைக்கு ஒரு மாத காலத்துக்குள் அனுப்பிவைப்போம். சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
ஜல்மார்க் யோஜனா...
மேலும் தேசிய நீர்வழிகளை மேம்படுத்துவதற்காக ‘ஜல்மார்க் யோஜனா' என்ற திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்த மத்திய அரசு அரசு திட்டமிட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.