இரக்கம் காட்டாத அதிருப்தி எம்எல்ஏக்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வர மாட்டோம்.. கூட்டாக அறிவிப்பு
மும்பை: நாளை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்கள் 12 பேர் இன்று மும்பையில் ஒரே நேரத்தில் நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், "நாங்கள் எங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டோம். எனவே, நாளை சட்டசபையில் கலந்து கொள்ளும் கேள்வியே எழவில்லை" என்றனர்.
காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ, பி.சி. பாட்டீல் கூறுகையில், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். பெங்களூருக்கு திரும்பிச் செல்லப்போவதில்லை. நாங்கள் எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சட்டசபைக்குச் செல்ல மாட்டோம் என்பதில், எந்த சந்தேகமும் வேண்டாம்" என்றார்.
கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!
எம்எல்ஏக்கள் கூறுவதை வைத்து பார்த்தால், நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், கர்நாடக கூட்டணி ஆட்சி கலைவது உறுதி என தெரிகிறது.
ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும், சபாநாயகர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "எடியூரப்பா எந்த வெற்றியைக் கொண்டாடுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தீர்ப்பின் கடைசி பத்தியில் எம்.எல்.ஏ.க்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எம்.எல்.ஏக்களின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது, அவ்வளவுதான்.
சபாநாயகர் தனக்கு விருப்பமானதைச் செய்ய முடியும் என்று நீதிமன்றம் எங்கே கூறியுள்ளது? ராஜினாமா மற்றும் தகுதியிழப்பு குறித்து நாளை சபாநாயகர் முடிவு செய்வார். இவ்வாறு அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.