கேரள இல்லத்தில் ரெய்டு நடக்கவேயில்லை: டெல்லி போலீஸ் கமிஷனர் விளக்கம்
டெல்லி: கேரள இல்லத்தில் ரெய்டு நடத்தியதாக வரும் தகவல்கள் பொய்யானவை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்து சேனா அமைப்பில் இருந்து, விஷ்ணுகுப்தா என்ற நபர் போலீசாருக்கு போன்போட்டு, கேரள இல்லத்தில் பசு மாமிசம் பறிமாறப்படுவதாகவும், அங்கு போராட்டம் நடத்த வேண்டிவரும் என்றும் கூறினார்.
இதையடுத்து டெல்லி போலீசார் கேரள இல்லத்துக்கு சென்று, மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா, இல்லையா என்று விசாரித்துவிட்டு, இப்படி ஒரு மிரட்டல் வந்துள்ளதால், உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் அறிவுறுத்திவிட்டு திரும்பினர். பாதுகாப்பை பலப்படுத்த சென்ற காவல்துறை, ரெய்டு நடத்திவிட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானது ஏன் என்று புரியவில்லை. இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.
கேரள இல்லத்தில் டெல்லி போலீசார் நுழைந்தது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதோடு, டெல்லி போலீசார், பாஜக சேனா போல செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி இதுகுறித்து விசாரிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள எம்.பிக்கள், இன்று மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், ரெய்டே நடக்கவில்லை என்று கமிஷனர் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.