காங். 'காணாமல் போய்விடும்'.. வெங்கையா நாயுடு மறைமுக பேச்சால் சர்ச்சை- நாடாளுமன்றத்தில் அமளி!!
டெல்லி: காங்கிரஸ் கட்சி தம்மை சுயபரிசோதனைக்குள்ளாக்காவிட்டால் காணாமலேயே போய்விடும் என்ற தொனியில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மறைமுக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வெங்கையா நாயுடுவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இரு சபைகளிலும் இன்று அமளி ஏற்பட்டது.
லோக்சபாவில் நேற்று பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஓய்வுக்காக சென்றிருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார். அப்போது, "காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. இல்லையெனில் 'தொலைதூரத்துக்கு' போய்விடும்" என்று கூறியிருந்தார்.
அதாவது காங்கிரஸ் கட்சி தம்மை சுயபரிசோதனைக்குள்ளாக்காவிட்டால் காணாமலேயே போய்விடும் என்று மறைமுகமாக கூறினார் வெங்கையா நாயுடு. அத்துடன் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெல்லாமல் "முட்டை" வாங்கியதையும் சுட்டிக்காட்டி வெங்கையா நாயுடு பேசினார்.
இது எதிர்க்கட்சிகளை அவமதிப்பதாகக் கூறி நேற்றே லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டன. இதனைத் தொடர்ந்து வெங்கையா நாயுடு தன்னுடைய விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
மேலும் வெங்கையா நாயுடு மன்னிப்பு கேட்காவிட்டால் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடமாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மிரட்டியது.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத எந்த ஒரு வார்த்தையையும் தாம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடிய போது வெங்கையா நாயுடுவின் விமர்சனத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. வெங்கையா நாயுடு மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து லோக்சபாவில் பேசிய வெங்கையா நாயுடு, எந்த ஒரு கட்சியையும் காயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தாம் பேசவில்லை. என்னுடைய பேச்சை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளன என்றார்.
ஆனால் சமாதானம் ஆகாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் குரல் எழுப்பவே லோக்சபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் ராஜ்யசபா நடவடிக்கைகளும் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.
வெங்கையா நாயுடுவின் தனி செயலர் நீக்கம்
இதனிடையே வெங்கையா நாயுடுவின் தனிச்செயலராக இருந்த புருசோத்தம் திடீரென தூக்கியடிக்கப்பட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான புருசோத்தம் சுற்றுலாத்துறை இணை அமைச்சரின் தனிச்செயலராக மாற்றப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.