நாட்டின் பிரதமராக முடியாமல் போனதற்கு வருத்தப்படவில்லை: எல்.கே.அத்வானி
பாட்னா: நாட்டின் பிரதமராக முடியாமல் போனதற்காக தாம் வருத்தப்படவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சின்ஹாவால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் எல்.கே.அத்வானி பங்கேற்றார்.
அப்போது அத்வானியிடம், பிரதமர் பதவிக்கு வர முடியாததில் வருத்தம் இல்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அத்வானி, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வர முடியாததில் எனக்கு வருத்தம் இல்லை.
நாடாளுமன்றத்தில் எனக்கு கிடைத்திருக்கும் இடம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எனக்கு கிடைக்கும் மரியாதை போன்றவை, தேவைக்கும் அதிகமான மனநிறைவை எனக்கு அளித்துள்ளது. பிரதமர் பதவிக்கு வருவதைவிட இது மேலானது என்றார்.
மோடியின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ‘மோடியின் அரசு செய்துவரும் எல்லாமே நல்லவைதான். இதுவரை எதிர்ப்புக்குரிய எதையும் இந்த அரசு செய்யவில்லை. மேலும் சில காலம் கடந்த பின்னரே இதைப்பற்றி மதிப்பிட முடியும். எனினும், இந்த ஆட்சி நல்ல முறையில் நடப்பதையே சில அடையாளங்கள் உணர்த்துகின்றன என்றார்.