பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் தாக்கப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: ஸ்பெயினின் பார்சிலோனாவில் பாதசாரிகள் மீது காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவில் ராம்ப்லாஸ் சுற்றுலா பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டிவந்த தீவிரவாதி பாதசாரிகள் மீது அதை மோதவிட்டு தப்பி ஓடினார். இதில் 13 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் மற்றொரு தாக்குதலை நடத்த மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் 2-வது தாக்குதல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
இத்தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் இந்தியர்கள் நிலைமை தொடர்பாக அறிய +34-608769335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.