இறந்து போன மூதாட்டியை புதைக்க பணமில்லை.. நோட்டு பிரச்சனையில் இன்னும் என்னெல்லாம் அனுபவிக்கனுமோ!
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளுக்குச் செல்வோர் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
சென்னை: வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான பணிகள் வங்கிகளில் தொடங்கியுள்ளன. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அடையாள அட்டை ஜெராக்ஸ் உடன் விண்ணப்பம் ஒன்றையும், வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றிலிருந்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. இதனால், கையில் பணம் இருந்தும் எல்லோரும் பணம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் யாராலும் ஒரு செலவையும் செய்ய முடியவில்லை. கல்யாண வீடு முதல் இறப்பு வீடு வரை அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்று, மத்திய பிரதேச மாநிலம் சதார்பூரில் மூத்தாட்டி ஒருவரின் உடலை இறுதி அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்தனர்.
ராஜ்பாய் அகிர்வார். 70 வயதான இவர் நீண்ட நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்து செவ்வாய் இரவு திடீரென உயிரிழந்துள்ளார். வயதானவர் என்பதாலும், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தவர்கள் என்பதாலும் உடனடியாக அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்துள்ளன.
இந்த நோட்டுக்களைக் கொண்டு இறுதி சடங்குகளுக்கு தேவையான எந்தப் பொருளையும் வாங்க முடியவில்லை. கடைக்காரர்களும் 500 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ளனர். உறவினர்கள் ஊர் முழுவதும் சுற்றி வந்தும் மூதாட்டியின் இறுதிச் சடங்கை செய்ய முடியாத சூழ்நிலை உருவானது.
உறவினர்கள் பரிதவிப்பதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவி செய்துள்ளனர். அதன் பிறகுதான், மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தேறின. மாலையில் ஒருவழியாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் நிறைவு பெற்றது.