கடும் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. காவி நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படாது என அறிவிப்பு!
டெல்லி: பாஸ்போர்ட் கடைசி பக்கம் நீக்கம் மற்றும் காவி நிறத்தில் பாஸ்போர்ட் ஆகிய முடிவுகளை கைவிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் விமான நிலைய சோதனையின் போது பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யும் போது அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை வெளியுறவுத்துறை நீக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாது.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீல நிற பாஸ்போர்ட்டில் கல்வி அடிப்படையில் காவி நிறத்தில் மாற்றவும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தை நீக்கும் முடிவு மற்றும் காவி நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கும் முடிவுகளை கைவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் பாஸ்போர்ட்டில் தற்போதைய நிலையே தொடரும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.