நெருக்கடி முற்றுகிறது.. சன் டிவி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை மீண்டும் மறுப்பு!
டெல்லி: சன் டிவி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறையிடம் உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்துள்ளது.
2001, 2002-இல் தொலைக்காட்சி சேவை தொடங்க முறையான அனுமதி பெற்ற சன் டிவி, சன் நியூஸ், சூர்யா டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், ஆதித்யா டிவி, கிரண் டிவி, உதயா காமெடி, குஷி டிவி, சிண்டு டிவி, கே டிவி, உதயா டிவி, உதயா மியூசிக், ஜெமினி டிவி, ஜெமினி காமெடி ஆகிய 15 தொலைக்காட்சி அலைவரிசைகளின் உரிமம் 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து காலாவதியாகின. இதன் பிறகு இத்தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிரான ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு, அது தொடர்புடைய அமலாக்கத் துறையின் பணப் பரிவர்த்தனை வழக்கு ஆகியவை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் ஒரு வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து உரிமத்தை புதுப்பிக்கக் கோரி சன் டிவி நிறுவனம் இந்த ஆண்டு அளித்த 15 அலைவரிசைகளின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உள்துறை தயக்கம் காட்டி வருகிறது. மீதமுள்ள 18 அலைவரிசைகளின் உரிமம் காலாவதியாக மேலும் சில ஆண்டுகள் உள்ளன.
இதனால் சன் டிவி சேனல்களுக்கான பாதுகாப்பு சான்றிதழை உள்துறை அமைச்சகம் மறுத்தது. இது தொடர்பாக செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகமும் சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தியது. பின்னர் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை கேட்கபட்டது. அவர் உள்துறை அமைச்சகத்தின் முடிவு சரியல்ல என கூறியிருந்தார்.
இதனிடையே உள்துறை அமைச்சகத்துக்கு சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிடி மாறனும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா முன்னிலையில் மத்திய உள்துறை, சட்டத் துறை, செய்தி ஒலிபரப்புத் துறை ஆகியவற்றின் செயலர்கள், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதில் சன் டிவி சேனல்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் உறுதியுடன் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாடு சென்ற மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடு திரும்பியதும் அவரிடம் இது பற்றி தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் சன் டிவி சேனல்களுக்கு பாதுகாப்பு உரிமம் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றம் செய்யக் கூடாது என்று மீண்டும் செய்தி ஒலிபரப்புத் துறையிடம் உள்துறை அமைச்சகம் மீண்டும் தெரிவித்துள்ளது. இதனால் சன் டிவி குழுமத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.