ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து.. மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவிப்பு
ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
டெல்லி: 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதில் ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2017-18ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். அதில் ரயில்வே துறைக்கான பாதுகாப்பு, புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, ரயில்வே இ-டிக்கெட்டுக்களுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் பணமற்ற பரிவர்த்தனைக்கு ஊக்கம் தரும் வகையில் இது அமையும் என்றும் அருண் ஜேட்லி குறிப்பிட்டார். பணமற்ற டிக்கெட் பரிவர்த்தனை 58 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், 2020ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்றும், மெட்ரோ ரயில் போக்குவரத்து நகர்ப்புறங்களுக்கு முக்கியம் என்பதால், புதிய மெட்ரோ ரயில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மெட்ரோ ரயிலுக்காக தனி சட்டம் விரைவில் இயற்றப்படுகிறது என்பதையும் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.