சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளா? இல்லவே இல்லை.. அடித்து சொல்லும் கர்நாடக சிறைத்துறை டிஜிபி!
சசிகலாவுக்கு சிறையில் எந்த சிறப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை என கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் எந்த சிறப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை என கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். தான் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஸ்பெஷல் சமையலறை உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது உயர் அதிகாரிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் டிஜிபி சத்திய நாராயணா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து தர 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லஞ்சம் வாங்கவில்லை
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா இன்று விளக்கம் அளித்தார். அப்போது, தான் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என கூறினார்.
எந்த வசதியும் வழங்கவில்லை
சசிகலாவிற்கு சிறையில் எந்த வசதியும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் சிறைக்குள் கைதிகள் சமையல் வேலை செய்வது விதிகளுக்குட்பட்டதுதான் என்றும் சத்திய நாராயணா கூறியுள்ளார்.
என்ன ஆதாரம் உள்ளது
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் சத்திய நாராயணா கேள்வி எழுப்பினார். சிறைக்குள் போட்டோ எடுத்த அதனை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தார் டிஐஜி ரூபா. அப்படி செய்யக்கூடாது என கூறியதற்கு இப்படி ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும் சத்தியநாராயணா கூறியுள்ளார்.
நேரடியாக மீடியாக்களிடம் பேசுகிறார்
பிரச்சனைகள் குறித்து என்னிடம் ஆலோசனை செய்யாமல் ரூபா நேரடியாக மீடியாக்களிடம் பேசுகிறார். சிறைத்துறை சார்ந்த முக்கிய விஷயங்களை வெளிப்படுத்துகிறார் என்றும் சத்தியாநாராயணா குற்றம்சாட்டினார்.
இதுவரை 2 மெமோக்கள்
ரூபாவுக்கு 2 மெமோக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று சிறையில் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டதற்காக. மற்றறொன்று முதல்வரின் கூட்டத்திற்கு வராமல் எனக்கும் தெரிவிக்காமல் சிறைக்கு சென்றதற்காக. வேறு எதற்கும் அவருக்கு மெமோ வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடிதம் கூட முதலில் மீடியாவுக்குதான்..
இந்தக் கடிதம் குறித்துக் கூட என் கவனத்திற்கு எதுவும் வரவில்லை ஆனால் அதற்கு முன் மீடியாவுக்கு சென்று விட்டது என்றும் சத்திய நாராயணா கூறினார். 3 ஜெயில்களை கண்காணிக்க நான்தான் டிஐஜி ரூபாவுக்கு அனுமதி கொடுத்தேன் என்றும் அவர் கூறினார்.
நடைமுறைப்படிதான் அனுமதி
தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கூட நடைமுறைப்படிதான் அனுமதி வழங்கப்படுகிறது என்றும் சத்தியநாராயணா கூறினார். ரூபா கூறும் குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு பைசா கூட வாங்கவில்லை
யாரிடம் இருந்தும் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை. சிறையில் இருந்து ஒரு பிஸ்கெட்டைக் கூட நான் பெற்றதில் என்றும் அவர் கூறினார். சிறப்பு சமையலறை எதுவும் இல்லை. எப்போதும் உள்ள சமையலறைதான் உள்ளது என்றும் டிஜிபி சத்தியநாராயணா கூறியுள்ளார்.