மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை இல்லை: சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்
டெல்லி: அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கவே முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இத்தடைக்கு எதிராக மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தன.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நுழைவுத் தேர்வு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று முன்தினம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால் இந்த நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கவே முடியாது என திட்டவட்டமாக இன்று கூறியுள்ளது.
மேலும் நுழைவுத் தேர்வுகளை தனித்தனியே நடத்த அனுமதி கோரியும் சில மாநிலங்கள் மனுத் தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்
அத்துடன் வழக்கு நடைபெறும் காலத்தில் மாநிலங்கள் தேர்வு நடத்த தடை ஏதும் இல்லை என்றும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் மே 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.