ஐசிசி தலைவராக என்.சீனிவாசன் பொறுப்பேற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் (சேர்மன்) பதவியை சீனிவாசன் ஏற்பதற்கு தடை விதிக்குமாறு பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டது.
இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவராக சீனிவாசன், கடந்த 2011 முதல் பதவி வகித்துவந்தார். இந்தியன், பிரிமியர் லீக் கிரிக்கெட் சூதாட்டத்தில், சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒதுங்கினார்.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதனிடையே இம்மாதம் 27ம்தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தலைவராக (சேர்மன்) சீனிவாசன் பொறுப்பேற்க இருக்கிறார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், சீனிவாசன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் பொறுப்பேற்க தயாராகினார். இதற்கு எதிராக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐபிஎல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள், ஜே.எஸ்.கேகர் மற்றும் சி.நாகப்பன் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஐபிஎல் தொடர்பான முறைகேடுகள் பற்றி நடத்தப்பட்ட நீதிபதி முட்கல் தலைமையிலான குழு சமர்பித்த அறிக்கையில் சீனிவாசன் உட்பட 13 பேரின் பெயர்கள் இருந்தன என்று தெரிவித்த பீகார் கிரிக்கெட் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை சீனிவாசன் ஏற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சீனிவாசன் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பையும் தமது வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக் காட்டினார்.
எனினும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சீனிவாசன் பதவி ஏற்பதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே வழங்கிய கோர்ட் உத்தரவு மிகவும் தெளிவாக, குழப்பம் இல்லாமல் உள்ளபோது அவசரமாக இதை விசாரிக்க அவசியம் இல்லை என்று கூறி வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி சீனிவாசன் பிசிசிஐ பதவிகளில் இருந்துதான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார். ஐசிசி தொடர்பாக உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் கூறியிருக்கவில்லை. எனவே சீனிவாசன் ஐசிசி தலைவராவதற்கு தடை விதிக்க கோரிய மனு திங்கள்கிழமை தள்ளுபடியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.