மாயமான விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பு: விமானப் படை
இடாநகர்: மாயமான ஏ.என்.32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துவிட்டனர் என விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் 13 பேருடன் அஸ்ஸாமின் ஜோர்ஹட் தளத்தில் இருந்து ஜூன் 3-ந் தேதி பகல் 12.25-க்கு புறப்பட்டது. ஆனால் 30 நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது.
அருணாசலப்பிரதேசத்தின் விமான தளத்தை அந்த விமானம் சென்றடையவும் இல்லை. இதையடுத்து விமானத்தை தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இதனிடையே அருணாசலப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்ததது.
அப்பகுதியில் மிகுந்த போராட்டத்துக்கு இடையே விமானப் படை வீரர்கள், மலையேற்ற வீரர்கள் இறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தின் பாகங்கள் இருந்தனவே தவிர பயணித்த 13 பேர் குறித்து எந்த தகவலும் இல்லை.
இதனால் இன்று காலையிலும் அப்பகுதியில் பயணித்த 13 பேரில் எவரேனும் உயிருடன் உள்ளனரா? என தேடப்பட்டது. ஆனால் அப்பகுதியில் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
ஏற்கனவே 13 பேரின் குடும்பத்தினருக்கும் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. தற்போது சம்பவ இடத்தில் இருந்தும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மாயமான 13 பேரும் உயிரிழந்துவிட்டனர் என விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மரணித்த 13 வீரர்களுக்கும் வீரவணக்கத்தையும் விமானப் படை செலுத்தியுள்ளது. ஏ.என்.32 விமானத்தில் பயணித்து மரணமடைந்த வீரர்கள் விவரத்தையும் விமானப் படை வெளியிட்டுள்ளது. மரணித்த மாவீரர்கள் விவரம்:
விங் கமாண்டர் ஜிஎம் சார்லஸ், ஹெச். வினோத், ஆர். தாபா, தன்வார், எஸ்.மொகந்தி, எம்.கே.கார்க், கே.கே. மிஸ்ரா, அனூப் குமார், ஷெரின், எஸ்,கே.சிங், பங்கஜ், புதாலி, ராஜேஷ் குமார்.