ரூபாய் நோட்டு: நவ.28 போராட்டம் வரை அரசுடன் பேச்சு இல்லை- எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
ரூபாய் நோட்டு மாற்ற அறிவிப்பை எதிர்த்து நவம்பர் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் வரை மத்திய அரசுடன் பேச்சு இல்லை என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
டெல்லி: ரூபாய் நோட்டு மாற்ற அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் வரை மத்திய அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த கையோடு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தினார். புதிய நோட்டுகள் கடந்த 11ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. கறுப்புப்பண ஒழிப்புக்கான பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பாடு ஏற்பட்டுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் வங்கி மற்றும ஏடிஎம் வாசல்களில் நின்றவர்களில் சிலர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் வணிகர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 16ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இதில் ரூபாய் நோட்டு மாற்ற பிரச்சனையை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடக்கவிடாமல் முடக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள், ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பபெறக்கோரி வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காகவும் எதிர்க்காட்சிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று எதிர்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் முன்னதாக ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள், நவம்பர் 28 போராட்டம் முடியும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இது மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.