4.5 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் இல்லை, குடிக்க தண்ணீரும் இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவில் 4. 5 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் இல்லை, குடிக்க தண்ணீரும் இல்லை என்று அறிக்கை வெளியாகியுள்ளது.
டெல்லி: இந்தியாவில் உள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகளும், குடிக்க தண்ணீரும் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவை மத்திய ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இங்கு பள்ளிக்கு செல்வதற்கு முன்னர் இங்கு குழந்தைகள் சேர்க்கப்படுவர்.
அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்துடன் மதிய உணவு, நோய் தடுப்பு திட்டங்கள், மருத்துவ பரிசோதனை ஆகிய 6 சேவைகள் வழங்கப்படுகின்றன.
அறிக்கை
இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் உள்ள வசதி வாய்ப்புகள் குறித்து மனித வள மேம்பாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்தது. அதன்படி அந்த ஆய்வறிக்கையை நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
டாய்லெட் இல்லை
இந்தியாவில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 சதவீத மையங்களில் கழிப்பறை வசதி இல்லை. அதுபோல் 25 சதவீத மையங்களில் குடிதண்ணீர் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இதுபோல் மொத்தம் 4.5 அங்கன்வாடி மையங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாநிலங்களில்...
மணிப்பூரில் 21 சதவீத அங்கன்வாடி மையங்களிலும், அருணாசலப்பிரதேசத்தில் 28 சதவீத மையங்களிலும், உத்தரகாண்ட் 29 சதவீத மையங்களிலும் , கர்நாடகாவில் 38 சதவீத மையங்களிலும், தெலுங்கானாவில் 40 சதவீத மையங்களிலும், ஜம்மு- காஷ்மீரில் 48 சதவீத மையங்களிலும் மகாராஷ்டிராவில் 53 சதவீத மையங்களிலும் மட்டுமே குடி நீர் வசதி உள்ளது. அதுபோல் தெலுங்கானாவில் 21.30 சதவீத மையங்களிலும், மணிப்பூரில் 27 சதவீத மையங்களிலும், ஜார்க்கண்டில் 38 சதவீத மையங்களிலும் ஆந்திராவில் 43 சதவீத மையங்களிலும் ஜம்மு- காஷ்மீரில் 44 சதவீத மையங்களிலும் அஸ்ஸாமில் 47 சதவீத மையங்களிலும் அருணாசலில் 48 சதவீ மையங்களிலும் ஒடிஸாவில் 52 சதவீத மையங்களிலும் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.
2000 மையங்களில் குடிநீர்
அங்கன்வாடியில் திருத்தியமைக்கப்பட்ட சேவைகளின் கீழ் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களில் உள்ள 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்கு 70 ஆயிரம் கழிப்பறைகளை கட்ட ரூ. 54 கோடியும். குடிநீர் வசதியை ஏற்படுத்த ரூ.13 கோடியும் நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.