ஜூலை 1 முதல் ரயில்வேயில் புது ரூல்ஸ்... ரத்து செய்யப்படும் தட்கல் டிக்கெட்டுக்கு 50% கட்டணம் வாபஸ்
டெல்லி: இந்திய ரயில்வேயில் வரும் ஜூலை 1-ந் தேதி முதல் இந்தியன் ரயில்வே தனது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.
இந்தியன் ரயில்வே நிர்வாகம் வரும் 1-ந் தேதி புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டால் லச்சக்கணக்கான ரயில் பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் 50% கட்டணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்களாம்.
தட்கல் டிக்கெட்:
முன்பதிவு செய்த தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் 50% தொகை திரும்ப கிடைக்கும் விதிமுறை அமலாகிறது. இதற்கு தற்போது தட்கல் டிக்கெட்டை நாமாக முன்வந்து ரத்து செய்தால், கட்டணம் ஏதும் திரும்ப கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
தட்கல் டைமிங்:
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரம் மாற்றப்படுகிறது. அதன்படி ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு முதல் 11 மணி வரையிலும், படுக்கை வசதியுடன் கூடிய (ஸ்லீப்பர் கோச்) பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை11 முதல் 12 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சுவிதா சிறப்பு ரயில்:
சுவிதா சிறப்பு ரயில்களில் ஜூலை 1-ந் தேதி முதல் இனி காத்திருப்போர் பட்டியல் (வெயிட்டிங் லிஸ்ட்) கிடையாது. டிக்கெட் இருக்கும் பட்சத்தில்
மட்டுமே டிக்கெட் வழங்கப்படும்.
பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:
ராஜ்தானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் உள்ள ரயில் பெட்டிகளின் (கோச்) எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மேலும் அந்த இரண்டு ரயில்களிலும் காகிதப் பயன்பாடற்ற டிக்கெட் வழங்கப்படும். அதாவது மொபைல் மூலமாகவே டிக்கெட் வழங்கப்படுமாம்.
மொழி இனி பிரச்சனை இல்லை:
பல்வேறு மொழிகளிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே கொண்டுவர உள்ளது. மேலும், ப்ரீமியம் ரயில்கள் இயக்கப்படுவது முடிவுக்கு வருகின்றன.
பாதி கட்டணம் கியாரண்டி:
முக்கிய விழக்காலங்களில் இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் பாதி திரும்ப வழங்கப்படும்
ரத்து கட்டணம் எவ்வளவு?
ரத்து செய்யப்படும் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்டுகளின் கட்டணம் 50 சதவீதம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும். இதேபோல மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.90 பிடித்தம் செய்யப்படும்.
படுக்கை வசதி (ஸ்லீப்பர் கிளாஸ்) டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.60 பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பல அதிரடி மாற்றங்களை இந்திய ரயில்வே வரும் ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்துகிறது.