எளிமையான முறையில் பதவியேற்பேன்.. பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அதிரடி
பஞ்சாப் மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பதவியேற்பு விழாவில் எந்த ஆடம்பரமும் இருக்காது என அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்: நிதி நெருக்கடி காரணமாக பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்திட, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் முடிவு செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் அம்ரிந்தர் சிங் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இத்தேர்தலில், பாட்டியாலா தொகுதியில் அம்ரிந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளளார். வருகின்ற 16-ம் தேதி அமரீந்தர் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் முறைப்படி பதவியேற்கவுள்ளனர்.
இது தொடர்பாக அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பதவியேற்பு விழாவில் எந்த ஆடம்பரமும் இருக்காது.தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு ரூபாயும் சேமிக்கப்படுவது மிக அவசியமாக உள்ளது.
எனவே எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியேற்பு விழா அழைப்பிதழ்களை குறைந்த செலவில் அச்சடித்துக் கொள்ள வேண்டும். கட்சி ஆதரவாளர்கள் செலவு செய்து பிரமாண்ட பதாகைகளை சாலையோரங்களில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆளும் சிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.