சபரிமலை அய்யப்பன் கோயிலில் தண்ணீர் தட்டுப்பாடு..... காசு கொடுத்து வாங்கும் தேவஸ்தானம்!
சபரிமலை அய்யப்பன் கோயிலில் தண்ணீர் இல்லாமல் தேவஸ்தானம் போர்டு சிரமப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி விஷு பண்டிகை வருவதால், பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்: பருவமழை பொய்த்துப் போன காரணத்தால், சபரிமலை பாம்பன் ஆற்றில் நீர்வரத்து இல்லை. இதனால் சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்கும் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலை தேவஸ்தானம் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் அவலம் உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு, தென்னிந்தியாவில் பருவமழை பொய்த்துப் போனதால் பல இடங்களில் நீர் ஆதாரங்களான ஆறு, குளம், ஏரிகளில் நீர் வறண்டுவிட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் சபரிமலைப் பகுதியில் ஓடும் பாம்பன் ஆறும் நீரில்லாமல் வறண்டுவிட்டது. இதனால் சபரிமலை அய்யப்பன் சுவாமி கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்கும் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கும் தண்ணீர் இல்லாமல் கோயில் தேவஸ்தானம் மிகவும் சிரமப்படுகிறது.
தண்னீர் தட்டுப்பாடு மிகுந்து இருக்கும் இந்த சூழலில்தான், ஏபரல் 14ஆம் தேதி, கேரள புதுவருடம் வருகின்றது. அதற்காக ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் நீர்த்தேவையை சமாளிக்க தேவஸ்தானம் கேரள குடிநீர் வாரியத்திலிருந்து பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடிவு செய்துள்ளது.