அணை நிரம்பி வழியும்போதும் அதே பல்லவியை பாடும் சித்தராமையா
கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீரை தர இயலாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூர்: கர்நாடகத்தில் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் குறித்து வழக்குரைஞர்களிடம் ஆலோசித்து பதிலளிப்பேன். இந்த விவகாரத்தில் கர்நாடக தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைப்போம்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது.
தண்ணீர் தர இயலாத சூழல்
பேரிடர் கால நீர்ப் பகிர்வுப் படியும் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்தால், அது பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற ரிசர்வ் வங்கித் தலைவர் உர்ஜித் படேலின் கருத்துகளை ஏற்க முடியாது.
பயிர் கடன் தள்ளுபடி
விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்திருக்கிறேன்.
திடீர் பரிவு
பாஜக மாநிலத் தலைவர் எதியூரப்பாவுக்கு அண்மைக் காலமாக தாழ்த்தப்பட்டோர் மீது திடீர் பரிவு ஏற்பட்டுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த போது தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் உணவு உண்ணும் எண்ணம் ஏற்படவில்லையா?
தேர்தலுக்காக...
இப்போது தேர்தல் நெருங்குவதால் தாழ்த்தப்பட்டோர் மீது எடியூரப்பா அன்பு காட்டுகிறார். எதியூரப்பாவின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார் அவர்.