அசைவம் Vs சைவம்: 'நோபல்' அபிஜித்தை முன்வைத்து வங்காளிகள்- குஜராத்திகள் மோதல்- ஆட்டத்தில் ரஜினியும்!
கொல்கத்தா: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை கொண்டாடி வரும் வங்காளிகள் போகிற போக்கில் 'சைவம்- அசைவம்' மோதலை கிளப்பிவிட்டதால் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
மேற்கு வங்க மக்களைப் பொறுத்தவரையில் மீன் என்பது அவர்களது உணவின் ஒரு அங்கம். சுபநிகழ்ச்சிச்களிலும் கூட மீன் பிரதான ஒரு பொருளாக இடம்பிடித்திருக்கும். மேற்கு வங்கத்தின் உயர்ஜாதியினராக இருந்தாலும் மீன் என்பது அவர்களைப் பொறுத்தவரை சைவ உணவுதான்.
குஜராத்திகளைப் பொறுத்தவரை காய்கறிகளுடனான சைவம்தான் பிரதான உணவு. இப்போது சமூக வலைதளங்களில் சைவம், அசைவம் உணவை முன்வைத்து வங்காளிகளும் குஜராத்திகளும் மோதி வருகின்றனர். இந்த பஞ்சாயத்துக்கு எதற்கு தெரியுமா?
மே.வங்கத்தில் உற்சாகம்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ மற்றும் மெக்கேல் கிரேம் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தங்களது மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதால் வங்காளிகளும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டரில் அதகளம்
ட்விட்டரில் அபர்ணா என்ற வங்காளி, நாங்கள் 6 நோபல் பரிசுகள், 1 ஆஸ்கர் விருது, தேசிய கீதம், வந்தே மாதரம் என உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்! நாங்கள் மீன், மட்டன், மாடு, பன்றி கறி சாப்பிடுகிறவர்கள். உங்கள் டோக்லா உள்ளிட்ட சைவ உணவுகளுடன் எங்களைவிட்டு ஒதுங்கி நில்லுங்கள் என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக குஜராத்தைச் சேர்ந்த ப்ராகிருதி என்பவர், நாங்கள் டோக்லா உள்ளிட்ட சைவம் சாப்பிடுகிறவர்கள்தான்.. ஆனால் இந்தியாவின் 5 பணக்காரர்களில் 4 பேர் குஜராத்திகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்திருக்கிறார்.
தோசை கொடுத்த ரஜினி
சந்தோஷ் என்ற ட்வீட்டிஸ்ட், காந்தி கூட குஜராத்திதான்.. மோடி மற்றும் அமித்ஷாவை முன்வைத்து குஜராத்திகளை பொதுமைப்படுத்திவிடக் கூடாது என சமாதானம் செய்திருக்கிறார். இன்னொருவர் ரஜினிகாந்தையும் கோர்த்துவிட்டிருக்கிறார். ரமேஷ் ஶ்ரீவத்ஸ் என்பவர், டோக்ளா சாப்பிட்டவர்கள் பெரிய தலைவர்கள்- தொழிலதிபர்கள்; மீன் சாப்பிட்டவர்கள் பெரிய விஞ்ஞானிகள்- அறிவுஜீவிகள்.. நான் சொல்ல வருவது தோசைதான் நமக்கு ரஜினிகாந்தை கொடுத்திருக்கிறது என்பதுதான் என கூறியுள்ளார்.
ஒடிஷாவிடம் இருந்து கடன்
நிகுஞ்சா என்பவரோ, வங்காளிகளின் பெரும்பாலான உணவுகள் ஒடிஷாவில் இருந்து கடன் வாங்கியதுதான் என இன்னொரு பக்கம் சிண்டு முடித்துவிட்டிருக்கிறார். ஏற்கனவே உணவின் அடிப்படையிலான வெறுப்பரசியல் மதவாத சக்திகளால் தூண்டிவிடப்ப்பட்டு கும்பல் வன்முறைகள் என நீண்டு கொண்டே போகிறது. இப்போது மாநிலங்களின் பெயரால் இன்னொரு உணவு அரசியலுக்கு தூபம் போடப்பட்டிருக்கிறது!
அடங்க மறுக்கும் ட்வீட்டிஸ்டுகள்!