கொரோனா மரணங்கள்- யாரும் தடுக்க முடியாது;வயதானால் சாகத்தான் வேண்டும்: ம.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு
போபால்: கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களை எவர் ஒருவராலும் தடுக்க முடியாது; சாகிற வயது வந்துவிட்டால் சாகத்தானே வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சர் பிரேம்சிங் படேல் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் சுனாமிப் பேரலை போல தாக்கி வருகிறது. கொத்து கொத்தாக கொரோனா தாக்கி வருவதால் ஒவ்வொரு மாநிலமும் பதற்றத்தில் இருந்து வருகிறது.
மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தும் வருகின்றன. மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா தாக்கம் உக்கிரமாகவே இருந்து வருகிறது.
கொரோனா பரவும் இக்கட்டான சூழ்நிலையில் நீட் தேர்வு நடத்த இது சரியான நேரம் தானா? - மு.க ஸ்டாலின்
கொரோனா மரணங்கள் மறைப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை சரியாக மேற்கொள்ளவில்லை என்கின்றனர். கொரோனா மரணங்களை மறைத்து பேசுகின்றனர் அதிகாரிகள் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
ம.பி. அமைச்சர் ஷாக் பேட்டி
இந்த நிலையில் மத்திய பிரதேச அமைச்சர் பிரேம்சிங் கொரோனா மரணங்கள் தொடர்பாக அளித்திருக்கும் பேட்டி பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஒரு மாநிலத்தின் அமைச்சர் பொறுப்பு வகிப்பவர் இப்படி எல்லாம் பேசுவதா? என்கிற கண்டனக் குரல்களும் வலுத்து வருகின்றன. அப்படி என்ன பேசினார் ம.பி. அமைச்சர் பிரேம்சிங் படேல்?
வயது வந்துட்டா சாகனும்
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரேம்சிங் படேல் அளித்த பேட்டி: கொரோனாவால் ஏற்படும் இத்தகைய மரணங்களை எவராலும் தடுக்க முடியாது. எல்லோருமே கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்கின்றனர். ஒவ்வொரு நாளும் மக்கள் செத்து மடிகிறார்கள் என்கிறீர்கள். மக்களுக்கு வயதாகிவிட்டால் சாகத்தானே வேண்டும். இவ்வாறு பிரேம்சிங் படேல் கூறியிருக்கிறார்.
ம.பி.யில் தொடர் சர்ச்சை
2 நாட்களுக்கு முன்னர்தான் பாஜக பிரமுகர் கமல் பிரதாப் லாக்டவுன் அமலில் இருந்த போது பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடினார். அதேபோல் ம.பி. மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர் சுவாசித்து கொண்டிருந்த ஆக்சிஜன் குழாயை வார்டு பாய் ஒருவர் கழற்றிவிட்டதால் அந்த நபர் மரணமடைந்தார். இப்போது மாநில அமைச்சர் பிரேம்சிங் படேல் இப்படி பேசியிருப்பது கடும் அதிர்ச்சியையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.