தப்பி ஓடிய விஜய்மல்லையாவுக்கு செக் மோசடி வழக்கிலும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
மும்பை: இந்திய வங்கிகளில் ரூ9,000 கோடி கடனைப் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு செக் மோசடி வழக்கிலும் மும்பை நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாராண்ட் பிறப்பித்துள்ளது.
தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருந்தார். ஆனால் வட்டியுடன் அதை திருப்பி செலுத்தாமல் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இந்தியாவுக்கு திரும்பி வந்து தம் மீதான வழக்குகளையும் சந்திக்க அவர் மறுத்துவிட்டார். அவர் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளன.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததுடன், லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகும் விஜய் மல்லையா ஆஜராகாததால், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதுடன் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே 2 முறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று செக் மோசடி வழக்கில் 3வது முறையாக விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.