சபரிமலை பிரசாதம்.. அதிரடி முடிவு- பிராமணர்கள் மட்டுமே தயாரிக்கும் நிபந்தனையை கைவிட்டது தேவசம் போர்டு
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் இருந்த ஜாதி நிபந்தனைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வாபஸ் பெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலையாள பிராமணர்கள் மட்டுமே நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விலக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சபரிமலை கோவிலில் பிரசாதம், மலையாள பிராமணர்களால் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தேவசம் போர்டு வெளியிட்ட விளம்பரங்களில் இருந்தது. ஆனால், இது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் தங்க கூரையில் நீர் கசிவு..உத்தரவு கொடுத்த ஐயப்பன்..சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பு
தேவசம் போர்டு விளம்பரம்
கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு பூஜை நிகழ்வையொட்டி, ஐயப்பன் கோவிலுக்கு உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று முன்பு தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
நிபந்தனை நீக்கம்
இந்நிலையில், நேற்று தேவசம் போர்டு கொடுத்துள்ள விளம்பரத்தில் இந்த ஜாதி நிபந்தனை தவிர்க்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலையாள பிராமணர்கள் மட்டுமே நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விலக்கி தேவசம் போர்டு விளம்பரம் வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும்
முன்னதாக அம்பேத்கர் கலாசார மன்றத்தின் தலைவர் சிவன் கதலி, குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் என அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு கொடுத்துள்ள விளம்பரம் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்று குற்றம்சாட்டியிருந்தார். மாநில அரசுக்கும் மனித உரிமை ஆணையத்துக்கும் இதுதொடர்பாக புகார் அனுப்பினார்.
சாதியவாத நடைமுறை
2001ஆம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவந்த பழைய சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
வரவேற்பு
தேவசம் போர்டு விளம்பரத்தில் மலையாள பிராமணர்கள் மட்டும் என்ற நிபந்தனை விலக்கு பெறப்பட்டிருப்பதை அம்பேத்கர் கலாசார மன்றத் தலைவர் சிவன் கதலி வரவேற்றுள்ளார். சிவன் கதலி பேசுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தேவசம் நிலை மாறியிருப்பது மறுமலர்ச்சிக்கு பலம் சேர்த்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.