டெல்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம் அல்லாதவரையும் மத மாநாட்டில் பங்கேற்றதாக சொன்ன சத்தீஸ்கர் அரசு
ராய்ப்பூர்: டெல்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம் அல்லாத சுற்றுலா பயணிகளையும் வர்த்தகர்களையும் தப்லீக் மத மாநாட்டில் பங்கேற்றவர்களாக பட்டியலிட்டிருக்கிறது சத்தீஸ்கர் மாநில அரசு.
டெல்லி மத மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் 159 பேர் என ஒரு தகவலை அறிவித்தது சத்தீஸ்கர் அரசு. சத்தீஸ்கர் அரசு வெளியிட்ட பட்டியலை வைத்து தி பிரிண்ட் இணையதளம் அதில் இடம்பெற்றவர்களை தொடர்பு கொண்டது.
அப்பட்டியலில் இடம்பெற்ற 100க்கும் மேற்பட்டோர் முஸ்லிம் அல்லாதவர்களாம். டெல்லிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் ஏறி சொந்த ஊர் திரும்பியவர்களாம்.
அவர்களையும் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது மாவட்ட நிர்வாகம். இதை ஏற்க மறுத்த போது அரசு சொல்வதை கேட்காவிட்டால் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும்; தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்களாக முத்திரை குத்தப்படுவீர்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தி பிரிண்ட் இணையதளத்திடம் உமேஸ் பாண்டே என்பவர் கூறுகையில், அரசின் தனிமைப்படுத்துதல் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய பின்னர் 500க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர்கள் அனைவரிடமுமே நான் தப்லீக் மாநாட்டுக்கு போகவில்லை என விளக்கம் தெரிவித்தே ஓய்ந்து போய்விட்டேன் என்றார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தாம் டெல்லிக்கு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சிக்கு செல்வதாகவும் நிஜாமுதீனில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் விவரித்திருக்கிறார். இதேபோல் கமால்குமார் என்ற வர்த்தகரும் தப்லீல் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்.
Recommended Video
சத்தீஸ்கர் அரசு வெளியிட்ட பட்டியலில் இன்னொரு கூத்தும் நிகழ்ந்துள்ளது. அப்பட்டியலில் இடம்பெற்ற சிலர் அந்த மாநிலத்தை விட்டே வெளியேறி பல ஆண்டுகளாகிவிட்டதாம். சிம் கார்டுகள் சத்தீஸ்கரில் வாங்கப்பட்டதால் அவர்களையும் தங்களது மாநில பட்டியலில் இணைத்துவிட்டதாம் அந்த அரசு.