நாகாலாந்து: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வலுக்கும் குரல்!
கோஹிமா: நாகாலாந்தில் 14 அப்பாவி பொதுமக்களை ராணுவம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து வடகிழக்கு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை (Armed Forces Special Powers Act- AFSPA) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் கோன்யாக் பழங்குடிகள் 14 பேரை தீவிரவாதிகள் என சந்தேகித்து ராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது. இந்த படுகொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படுகொலையைக் கண்டித்து நாகாலாந்து மாநிலத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த பிரச்சனையை எழுப்பி இருந்தனர்.
எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. நாகாலாந்து வன்முறை.. கடும் அமளிக்கு சாட்சியான நாடாளுமன்றம்
அமித்ஷா விளக்கம்
இதனைத் தொடர்ந்து லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமித்ஷா, மோன் மாவட்டத்தில் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 14 பொதுமக்கள் உயிரிழந்தனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது. இந்த சம்பவத்துக்கு ராணுவம் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளது. மத்திய அரசும் வருத்தம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. நாகாலாந்து மாநில அரசும் விசாரணை குழு அமைத்திருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார் அமித்ஷா.
ஆயுதப் படை சட்டத்துக்கு எதிர்ப்பு
மேலும் மோன் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 14 பழங்குடியினரின் இறுதி நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நைபியு ரியோ பங்கேற்றார். அங்கு பேசிய அவர், ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் AFSPA சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மாவும் இந்த சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். கோன்யாக் நாகா பழங்குடிகளின் கூட்டமைப்பும் ஆயுத படையினருக்கு அதிகாரம் தரும் இச்சட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டத்தின் அம்சங்கள் என்ன?
நாட்டில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. பொதுவாக இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதி ராணுவத்தின் வசமாகும். இப்பகுதியில் ராணுவத்தினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் என யாரையேனும் கருதினால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கிறது. அதாவது எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சந்தேகிப்பவர்களை ராணுவம் சுட்டுக் கொல்ல அனுமதிக்கிறது இந்த சட்டம். சந்தேகிக்கும் நபர்களை எந்த வாரண்ட்டும் இல்லாமல் கைதும் செய்யலாம். எந்த இடத்திலும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இத்தகைய ராணுவத்தினருக்கு முழுமையான அதிகாரம் தரும் சட்டம் என்பதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்துக்கு நீண்டகாலமாகவே கடும் எதிர்ப்பு உள்ளது.
மணிப்பூர் போராட்டங்கள்
2004-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் தங்ஜம் மனோரமா என்ற இளம்பெண்ணை ராணுவத்தினர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து சுட்டுக் கொலை செய்தனர். இத்தகைய மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மணிப்பூரில் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர்கள் ராணுவத்துக்கு எதிராக நடத்திய நிர்வாணப் போராட்டம் நாட்டையே அதிர வைத்ததது. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திதான் இரோம் சர்மிளா நீண்டகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தற்போது நாகாலாந்தில் 14 பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு தரும் அதிகாரம் தரும் சட்டத்துக்கு எதிரான குரல் வலுத்துள்ளது.