விஜயதசமி, தசரா: வடமாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
டெல்லி: விஜயதசமி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு வட மாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விஜயதசமி, தசரா பண்டிகைகளின் இறுதியில் ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தென் மாநிலங்களில் இப்படியான ஒரு நிகழ்வு நடத்தப்படுவதில்லை.
தமிழகத்தில் திராவிடர் இயக்கம் இந்த ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 1950களில் வட இந்தியாவில் ராவணனை எரித்தால் தமிழகத்தில் ராமனை எரிப்போம் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதினார்
ராவணன் எரிப்பு- தமிழகம் எதிர்ப்பு
1970களின் இறுதியில் திராவிடர் கழகத்தலைவராக இருந்த மணியம்மையார் ராவண லீலா என்ற பெயரில் ராமன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியை நடத்தினார். 1990களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
டெல்லி தசரா
ஆனாலும் வட இந்தியாவில் தொடர்ந்து ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு நவஸ்ரீ தார்மிக் லீலா கமிட்டி மைதானத்தில் நடைபெற்றது.
ராமாயண நிகழ்ச்சிகள்
இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் தீப்பந்த அம்புகளை எய்து ராவணன் உருவபொம்மையை எரித்தனர். இதில் ராமாயண காட்சிகள் நாடக வடிவில் அரங்கேற்றப்பட்டன.
மோடி எரித்த ராவணன் பொம்மை
டெல்லி அருகே துவாராகாவில் நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். சண்டிகரில் 221 அடி ராவணன் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
வட இந்தியாவில் ராவணன் எரிப்பு நிகழ்வுகள்
இதேபோல் வட இந்தியாவின் பல நகரங்களில் ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.