ஆண்-பெண் பாலின விகிதம் வட இந்தியாவில்தான் குறைவு.. தொடரும் கருக்கலைப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆண் - பெண் பாலின விகிதம் வட இந்தியாவில்தான் குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆண் - பெண் பாலின விகிதம் வட இந்தியாவில்தான் குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2017ன் மக்கள் தொகை நிலவரப்படி இந்த முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
குஜராத், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா என எல்லா மாநிலங்களும் இந்த குறைவான பாலின விகிதத்தை கொண்டுள்ளது. பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
கேரளாவில் எப்போதும் போல ஆண்களை விட அதிக பெண்கள் இருக்கிறார்கள். தமிழகமும் இதில் நல்ல நிலையில் இருக்கிறது.
எந்த மாநிலத்தில் எவ்வளவு
அதன்படி ஹரியானாவில் 1000 ஆண்களுக்கு 831 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். உத்தரகாண்டில் 844 பெண்கள் மட்டும் இருக்கிறார்கள். குஜராத்தில் 854 பெண்கள் மட்டும் இருக்கிறார்கள். ராஜஸ்தானில் 861 பெண்கள் மட்டும் இருக்கிறார்கள்.டெல்லியில் 869 பெண்கள் மட்டும் இருக்கிறார்கள். மஹாராஷ்டிராவில் 878 பெண்கள் இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் 879 பெண்கள் இருக்கிறார்கள். பஞ்சாப்பில் 889 பெண்கள் இருக்கிறார்கள்.
எவ்வளவு இருக்க வேண்டும்
இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்றுள்ளது. ஆனால் மேற்கண்ட மாநிலங்களில் இந்த மதிப்பு அதைவிட குறைவாக இருக்கிறது. சராசரியாக 1000 ஆண்களுக்கு 943-980 பெண்கள் வரை இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அங்கு கரு கலைக்கப்படுகிறது, பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று அர்த்தம்.
நகரம்
அதேபோல் நகரத்தில்தான் பெண்கள் சதவிகிதம் குறைவாக இருக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் உள்ளனர். கிராமத்தில் 1000 ஆணுக்கு 923 பெண்கள் உள்ளனர். முன்பு போல கிராமத்தில் கருவை கலைக்கும் வழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது.
தென்னிந்தியா
தென்னிந்தியாவில்தான் பாலின விகிதம் நன்றாக இருக்கிறது. கேரளாவில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் உள்ளனர். புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1037 பெண்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் உள்ளனர்.