வருகிறது கோடை.. "செமை"யா இருக்குமாம் வெயில்.. மண்டை பத்திரம் மக்களே!
10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் இந்த ஆண்டு வட மாநிலங்களை சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட மாநிலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வெயிலை சமாளிக்க இப்போதில் இருந்தே மக்களே தயாராகுங்கள்.
பிப்ரவரி மாதம் கடந்து மார்ச் வந்தாலே எல்லோரும் 'உசு அசு' என்று வெயிலை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்த ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்து ஏற்கனவே பூமி காய்ந்து கிடக்கிறது.
இந்நிலையில், டெல்லி வானிலை ஆய்வு மையம் வட மாநிலங்களில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று அறிவித்துள்ளதை கேட்டால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.
தொடங்கிய வெயில்
பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், இந்த ஆண்டு அதன் தாக்கம் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி விடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
2006க்கு பின்..
கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கடுமையான வெயில் சுட்டெரித்தது. அதே போல் இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். 10 ஆண்டுகளுக்கு பின்னர் மிக மோசமான வெயிலை சந்திக்கப் போகிறார்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இயல்பு நிலை பாதிப்பு
கடுமையான வெயில் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் காலங்களில் ஏற்படும் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
சுட்டெரிப்பு
வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடியே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. டெல்லியில் 93 டிகிரிக்கு அதிகமான வெப்பம் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் வெயில் எப்படி?
வட மாநிலங்களை சுடும் வெயில் இங்கு தொடாதா? இங்கும் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட தமிழகம், தற்போது வெயிலின் கோரப்பிடியில் சிக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக 33 செல்சியஸ்சில் இருந்து 37 செல்சியஸ் வரை காய்ந்து வருகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, முதியோர் சாலையில் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.