கையில் தீ பந்தம்.. நடு இரவில் தொடங்கிய போராட்டம்.. இப்போதைக்கு முடியாது.. கொதிக்கும் நார்த் ஈஸ்ட்!
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
கொல்கத்தா: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. கைகளில் தீ பந்தம் ஏந்தியபடி அங்கு மாணவர்கள் எல்லோரும் களமிறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.
என்ன போராட்டம்
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது. அங்கு சாலைகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் வங்கதேசத்துடன் உறவு மொத்தமாக பாதிக்கப்படும்.
அகதிகள்
இதனால் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவில் அகதிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வருவார்கள். இதனால் வடகிழக்கு மாநிலத்தின் தோற்றமே மாறும். அங்கு அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் நடக்கும். அதேபோல் தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் பலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
எப்படி மாணவர்கள்
வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஏஐயுடிஎஓ, அனைத்து அசாம் மாணவர் சங்கம், கிர்சாக் முக்தி சங்கரம் சமிதி, அருணாச்சல பிரதேச மாணவர் சங்கம், நாகா மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
யார் ஆதரவு
அதேபோல் இடதுசாரி அமைப்புகளான எஸ்எப்ஐ, டிஒய்அப்ஐ, ஏஐடிடபிள்யுஏ, ஏஐஎஸ்எப், ஐபிடிஏ ஆகிய அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் நாங்கள் முதற்கட்டமாக 11 மணி நேரம் இந்த போராட்டத்தை நடத்துவோம். அதன்பின் தொடர்ந்து போராடுவோம்.
இன்று முடியாது
இந்த போராட்டம் இன்றோடு முடியாது. இன்னும் பல நாட்களுக்கு இந்த போராட்டம் தொடரும். இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரையில் இந்த போராட்டம் நடக்கும். இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இந்த போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்வோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
|
எப்படி நடக்கிறது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மெரினா போராட்டம் போல முழுக்க முழுக்க இளைஞர்கள் அதிகம் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு முழுக்க கையில் தீ பந்தத்தை வைத்து சாலைகளில் நடந்து போராட்டம் செய்தனர் .
|
என்ன முக்கியம்
இதில் மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவிற்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் கையில் தீ பந்தம் வைத்து இருந்ததால், போராட்டத்தை பார்க்கவே பெரிய வியப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.