ஆப்பிரிக்கர்களுடனான சிறு மோதலை தாக்குதலாக சித்தரிக்கும் மீடியாக்கள்- மீண்டும் சர்ச்சையில் வி.கே.சிங்
டெல்லி: டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டவர்களுடனான சிறிய கைகலப்பை கூட தாக்குதல்களாக ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மெஹ்ராலி பகுதியில் 3 இடங்களில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக உகாண்டா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள் இருவரும், நைஜீரியாவைச் சேர்ந்த ஆண்கள் இருவரும் போலீஸில் புகார் அளித்தனர்.
இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி வாழ் ஆப்பிரிக்க நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தாக்குதலுக்கு காரணமானவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆப்பிரிக்க மாணவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அந்த மாணவர்களைச் சந்தித்து பேச்சு நடத்துமாறு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங், அமைச்சக செயலாளர் அமர் சிங் ஆகியோருக்கு சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆப்பிரிக்கர் மீதான தாக்குதல் நடத்தவில்லை; சிறிய அளவிலான மோதலையே தாக்குதல் நடந்ததாக ஊடகங்கள்தான் உள்நோக்கத்துடன் பெரிதுபடுத்துகின்றன என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியிருக்கிறார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் ஆப்பிரிக்கர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்; ஆனால் அவரது இணை அமைச்சரோ, சின்ன கைகலப்பு- மோதல்தானே என கிண்டலடித்து வருகிறார்.
ஹரியானாவில் தலித் குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நாய் மீது கல்லெறிந்தால் கூட மத்திய அரசை கேள்வி கேட்கிறீர்களே? என்பது போன்ற பேச்சுகளால் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருபவர் வி.கே.சிங். தற்போது ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலை ஊடகங்களே உள்நோக்கத்துடன் பெரிதுபடுத்துவதாக வி.கே.சிங் கூறியுள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்ட்டுள்ளது.