இவர்தான்யா ஜென்டில்மேன்.. தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் பரிசு.. ராகுல் டிராவிட் அதிருப்தி!
Recommended Video
பெங்களூர்: தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளதால் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் உண்மையான சாம்பியனை போல ஆடியது இந்திய அணி.
வெற்றிக்கு பரிசாக இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை அறிவித்தது உச்சநீதிமன்றம் நியமித்த பிசிசிஐயின், நிர்வாகிகள் கமிட்டி.
உதவி பணியாளர்கள்
பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் அபே ஷர்மா, பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர், பயிற்சியாளர் ஆனந்த் தாதே, இயன்முறையாளர் மான்கேஷ் கெய்க்வாட் மற்றும் வீடியோ பகுப்பாளர் தேவராஜ் ரௌட் ஆகியோர் உதவி ஊழியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது.
பாரபட்சம் காட்டக்கூடாது
ஆனால், இவ்வாறு பரிசுத் தொகையைில் பாரபட்சம் காட்டப்பட்டதில் டிராவிட்டிற்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரி பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தனது அதிருப்தியை டிராவிட் பிசிசிஐக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைமுகமாக சொன்ன ராகுல் டிராவிட்
சமீபத்தில் டிராவிட் அளித்த பேட்டியில் கூட இந்த கருத்து அவருக்குள் இருப்பதை உணர முடிந்தது. நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஜூனியர் உலக கோப்பை வெற்றிக்கு பிறகு அனைவரது கவனமும் (புகழ்ச்சியும்) என்மீது மட்டுமே இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உதவி பணியாளர்களின் பணியை குறைத்து சொல்ல முடியாது. அனைவரும் ஒரு அணியாக இணைந்து பணியாற்றினோம். ஒவ்வொருவர் பெயராக சொல்ல விரும்பவில்லை என்றாலும், உதவி பணியாளர்கள் அதிக உழைப்பை கொட்டினர். நமது அணிக்காக இயன்றவரை பெஸ்ட் என்பதை கொடுத்தோம் என்றார் டிராவிட்.
ஜென்டில்மேன்
தனக்கு பரிசு தொகை கிடைத்த வரை மகிழ்ச்சி என்று நினைக்காமல் அனைவரையும் சமமாக நடத்துமாறு டிராவிட் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் அவரது மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கிரிக்கெட் ஆட்டத்தில் ஜென்டில்மேன் என அனைவராலும் புகழப்படும் டிராவிட், வாழ்க்கையிலும் அதேபோன்ற நேர்மை கொள்கைகளை கடைபிடித்து வருகிறார்கள் என்று பெருமிதம் தெரிவிக்கிறார்கள் முன்னாள், சக ஆட்டக்காரர்கள்.
தேசிய அணி பணிக்கே முக்கியத்துவம்
2017ம் ஆண்டில் அவருக்கு ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு வந்தது. பணம் மற்றும் புகழை பெறக்கூடிய அந்த வாய்ப்பை மறுத்த டிராவிட், தேசிய அணியின் வேலைக்கே முக்கியத்துவம் கொடுப்பது என தீர்மானித்து, ஜூனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றார்.