இனி ரயில் டிக்கெட்டுடன் உணவு, போர்வை, தலையணையும் ரிசர்வ் செய்யலாம்!
டெல்லி: ரயில் பயணத்தின் போது டிக்கெட் உடன் உணவு, போர்வை தலையணையும் ரிசர்வ் செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது. இனி ஏ.சி கோச்சில் பயணிக்கும் பயணிகள் மட்டுமல்ல இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிக்கும் பயணிகளும் போர்வை, தலையணை பெற்றுக்கொள்ளும் வசதி
ரயில்களில் இரவு நேரங்களில் நீண்ட தூர பயணம் செய்பவர்கள் தலையணை, போர்வை போன்றவைகளை தனி லக்கேஜ் ஆக கூடவே எடுத்து செல்வார்கள்.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக ரயில்களிலேயே வாடகைக்கு தலையணை, போர்வை கொடுப்பது அமுல்படுத்தப்பட்டது. அதுவும் சில நேரங்களில் கிடைக்கும். பல நேரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் பாதி வழியிலேயே நல்ல தூக்கத்தில் இருக்கும் போது பிடுங்கிக் கொள்வார்கள்.
தற்போது ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு செய்து உறுதி செய்யப்பட்டுள்ள டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பி.என்.ஆர். எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
2 போர்வைகள், ஒரு தலையணைக்கு ரூ. 140 கட்டணம், ஒரு போர்வைக்கு ரூ. 110 கட்டலாம். தேவைப்படும் பயணிகள் ரெயில் புறப்படுவதற்கு 5 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும். ரயில் புறப்பட்டதும் பயணிகளுக்கு போர்வை, தலையணை பார்சல் வழங்கப்படும். இறங்கும் ரயில் நிலையத்துக்கு முன்பாக திருப்பித் தரவேண்டும். பயணத்தை ரத்து செய்தால் கட்டணத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
ரூ. 60 கட்டணத்தில் உணவு வழங்குவது தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடனும் ரயில்வே துறை பேசி வருகிறது. இதே போல் தென்னிந்திய உணவு வகைகள் மற்றும் பீட்சா ஆகியவற்றையும் தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக சென்னை, சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளார்கள்.
போர்வை, தலையணை கொடுப்பது சரிதான். ஆனால் விலையைக் கேட்டால்தான் சொந்தமாகவே வாங்கிக் கொண்டு போய்விடலாம் போல் இருக்கிறது. விலையை குறைத்தால் மட்டுமே பயணிகளிடம் வரவேற்பு இருக்கும் என்பது ரயில் பயணிகளின் கருத்தாக உள்ளது.