பலாத்காரம் மட்டுமல்ல, பாலியல் மோசடி வழக்குகளையும் சமரச மையத்திற்கு அனுப்பக் கூடாது: கேரள ஹைகோர்ட்
கொச்சி: பலாத்கார வழக்குகளை மட்டுமல்ல, பாலியல் மோசடி வழக்குகளையும் கூட சமரச மையத்திற்குத் தீர்வுக்கு அனுப்பக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பாலியல் பலாத்கார வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதேபோன்ற ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்பக் கூடாது என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் தான் சமரச மையத்திற்கு வழக்கை அனுப்பி வைத்ததை வாபஸ் பெற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கேரள உயர்நீதிமனறம் இன்னொரு பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
பாலியல் மோசடி வழக்கு...
அதில் பலாத்கார வழக்கு மட்டுமல்ல, பாலியல் மோசடி வழக்குகளையும் கூட சமரச மையத்திற்கு அனுப்பக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு இப்போது பிறப்பிக்கப்படவில்லை. மாறாக கடந்த ஜனவரி 14ம் தேதியே இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு இந்த வாரம்தான் தீர்ப்பு விவரம் வெளியாகியுள்ளது.
செக்ஸ் மோசடி...
கேரளாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மிகப் பெரிய செக்ஸ் மோசடி வழக்குகளாகவே உள்ளன. அதாவது ஒருவரை பல பேர் சேர்ந்து பலாத்காரம் செய்வது என்று தான் பல வழக்குகள் உள்ளன. மிகப் பெரிய மோசடிச் செயல்களாகவே இவை உள்ளன. சில வழக்குகளில் 50க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பலாத்காரம் செய்ததும் நடப்பதுண்டு.
கேரள ஹைகோர்ட்...
இந்த நிலையில் இதுபோன்ற பாலியல் மோசடி வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்பக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கமால் பாஷா தீர்ப்பளித்துள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் கோவளம் பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை ஆபாசப் படம் மற்றும் விளம்பரங்களில் ஒரு கும்பல் நடிக்க வைத்தது. பின்னர் பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தி அதில் ஈடுபடுத்தியது. கொச்சி, சென்னையில் அப்பெண் சீரழிக்கப்பட்டார். 2 மாத காலம் அப்பெண்ணை உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சீரழித்தனர். இந்த செயலுக்கு அவரது தாயார், சகோதரி, தாய்மாமன் ஆகியோரே உடந்தையாக இருந்தனர்.
பொய் குற்றச்சாட்டு...
2007ம் ஆண்டு மே 10ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரை இந்த சம்பவங்கள் நடந்தன.இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யுமாறு கோரி அப்பெண்ணின் உறவினர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பெண்ணின் தாயாரின் சகோதரியால் பொய்யாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இவை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
தீர்ப்பு...
ஆனால் குற்றச்சாட்டை ரத்து செய்ய மறுத்த நீதிபதி கமால் பாஷா கீழ்க்கண்ட தீர்ப்பை அளித்துள்ளார். அதன் விவரம்:
ஆவணங்களைப் பரிசீலித்ததில், மனுதாரர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்களை தெளிவாகத் தெரிவித்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை. இவை தனிப்பட்ட விஷயம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. குடும்பத்துக்குள் நடந்த சண்டையாக இதைக் கருத முடியாது. நடந்துள்ள தவறுகள் மிகவும் கடுமையானவை, கடுமையா தண்டனைக்குரியவை.
சமரசத்திற்கு இடமில்லை...
தற்போது பாதிக்கப்பட்டுள்ள பெண் தங்களுடன் இருப்பதாகவும், தங்கள் பக்கம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. அதை சாதகமாக்கிக் கொண்டு வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் உரிமை கோரவும் முடியாது. மேலும் இதில் சமரசத்திற்கும் இடமில்லை. சமரசத் தீர்வுக்கும் இதை அனுப்ப முடியாது எந்று நீதிபதி கமால் பாஷா கூறியுள்ளார்.