தொடர்ந்து மாநிலங்களை இழக்கும் காங்கிரஸ்... கட்சிக்கு மட்டுமல்ல, கஜானாவிற்கும் ஆபத்து!
டெல்லி: தொடர்ந்து தன் வசமுள்ள மாநிலங்களை இழந்து வருவதன் மூலம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது காங்கிரஸ்.
கடந்த 36 மாதமாக சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது காங்கிரஸ்.
தொடர்ந்து பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். ஆனால், கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி மத்தியில் ஆட்சி அமைத்தது பாஜக.
ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா என ‘கை' வசமிருந்த மிகப் பெரிய மாநிலங்களை இழந்துள்ளது காங்கிரஸ்.
தோல்விக்கான காரணம்...
இத்தோல்விக்கு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை மட்டும் குற்றம் சொல்லி பிரயோஜனமில்லை என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள். கட்சி மேலிடத்திலிருந்து போதிய நிதி மற்றும் பிற சப்போர்ட் கிடைக்காததே இத்தோல்விகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
உத்திரவாதம் இல்லை...
இந்நிலையில், நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெல்லும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை.
காங். தலைவர்கள் கவலை...
இத்தொடர் தோல்விகள் காங்கிரசின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் என்ன செய்வது என்ற கவலை இப்போதே காங்கிரஸ் தலைவர்களை துரத்தத் தொடங்கியுள்ளது.
தொடரும் சறுக்கல்கள்...
எம்பவர், எம்பவர் என்று பேசியே காங்கிரஸை படு குழியில் தள்ளி விட்டார் ராகுல் காந்தி. அவரது தலைமையில் 2012ல் உ.பியில் பெரும் தோல்வியைத் தழுவியது காங்கிரஸ். அடுத்த 32 மாதங்களில் தொடர்ந்து சறுக்கல்தான்.
பொருளாதார அடி...
ராகுல் காந்தியின் பேச்சால் மேற்கு வங்கத்திலும் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்திக்க நேரிட்டது. ஆனால் தற்போது காங்கிரஸின் பெரும் கவலை என்னவென்றால் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் அதற்கு அடி விழப் போகிறது என்பதுதான்.
பணக் கட்டுப்பாடு...
இந்தக் கவலை ஏற்கனவே அதற்கு விட்டது. இதனால்தான் கடந்த லோக்சபா தேர்தலிலும் சரி, அதன் பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் சரி பணத்தை வாரியிறைப்பதை அது நிறுத்திக் கொண்டு விட்டது.
ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல்...
மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலின்போது பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு போதிய அளவு டெல்லியிலிருந்து பெட்டிகள் வரவில்லையாம். மேலும் சரியான முடிவு கிடைக்காது என்று ஊகிக்கப்பட்ட தொகுதிகளில் அது பணத்தை செலவழிக்கவும் தயாராக இல்லையாம்.
சிரமம் தான்...
தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பெரிய மாநிலம் என்றால் அது கர்நாடகம் மட்டுமே. அங்கும் கூட பொருளாதார ரீதியாக காங்கிரஸ் சிரமப்படுவதாக கூறுகிறார்கள்.