தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு... 72 மணி நேர பந்த்... ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்குக் கண்டனம் தெரிவித்து சீ்மாந்திராவில் 72 மணி நேர பந்த்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 16 மாதங்களாக சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையாகியிருந்தார் ரெட்டி. இந்த நிலையில் நேற்றைய மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சிறையில் இருந்தபோது அனுபவித்த வலியை விட இந்த முடிவுதான் எனக்குப் பெரும் வலியைக் கொடுத்துள்ளது. மிகவும் வேதனையாக இருக்கிறது.
ஒரு மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைக் கூட செய்யாமல் அவசரம் அவசரமாக மத்திய அமைச்சரவை மூலம் முடிவெடுத்துள்ளனர். ஜார்க்கண்ட் உருவாக்கப்பட்போதும், ஏன் ஆந்திராவே உருவாக்கப்பட்டபோதும் கூட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றித்தான் செய்தனர்.
தெலுங்கானா முடிவைநான் கண்டிக்கிறேன். சீமாந்திரா பகுதியில் 72 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுக்கிறேன். ஹைதராபாத்தில் அக்டோபர் 19ம் தேதி நடைபெறும் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் கூட்டத்தில் நான் பேசவுள்ளேன் என்றார் ரெட்டி.
சீமாந்திராவில் பந்த் - பதட்டம்
இந்த நிலையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் 48 மணி நேரம் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த முழுஅடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இந்த தகவலை ஆந்திர மாநில என்.ஜி.ஓ. சங்க தலைவர் பி.அசோக் பாபு தெரிவித்தார். அதேபோல கடப்பா மாவட்டத்தில் 72 மணி நேர முழுஅடைப்பு நடத்தப்படும் என்று சீமாந்திரா கடப்பா கூட்டு நடவடிக்கை குழு அறிவித்து உள்ளது.