சுனந்தா உடலில் பொலோனியம்?: அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கை: எய்ம்ஸ் டாக்டர்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா பொலோனியம் கொடுத்து கொலை செய்யப்படவில்லை என்றும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை அரிசயல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு கடந்த 29ம் தேதி இறுதி அறிக்கை அளித்துள்ளது.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மற்றும் நச்சுயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில்,
அரசியல் உள்நோக்கம்
சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் பொலோனியம் விஷம் வைத்து கொலை செய்யப்படவில்லை. அசிடாமினோபெனை(பாரசிட்டமால்) மதுவுடன் உட்கொண்டது தான் அவர் இறக்க காரணம்.
கொலையா?
சுனந்தாவின் உடலில் அசிடாமினோபென், கபைன், கோடினைன், எதில் ஆல்கஹால் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்துகளை மதுவுடன் எடுத்துக் கொண்டால் அது ஆபத்தாகும். இந்த மருந்துகளை அவரே எடுத்திருக்கலாம் அல்லது கட்டாயப்படுத்தி கொடுத்திருக்கலாம். இதை போலீசார் தான் கண்டறிய வேண்டும்.
காயம்
சுனந்தா தற்கொலை செய்ய அந்த மருந்துகளை எடுத்திருந்தால் அவரது உடலில் ஏன் பல இடங்களில் காயம் உள்ளது, மேலும் ஊசி போட்ட தடமும் உள்ளது? சுனந்தா குடிபோதையில் இருக்கையில் அவருக்கு அளவுக்கு அதிகமாக பாரசிட்டமாலை ஊசி மூலம் ஏற்றியிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
பொலோனியம்
சுனந்தாவின் மரணத்திற்கு பொலோனியம் தான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பரிசோதிக்கும் அளவுக்கு நம்மிடம் வசதி இல்லை என்று கூறுவதில் உண்மை இல்லை. இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த அரசியல் உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நம் தடயவியல் ஆய்வகங்களில் அனைத்து வசதிகளும் உள்ளன என்றார்.