பெட்ரோல் விலையை இதற்கு மேலும் குறைப்பது கஷ்டம்... எதிர்கட்சிகளுக்கு பெட்ரோலியத்துறை பதில்
டெல்லி : பெட்ரோல், டீசல் விலையை இதற்கு மேலும் குறைக்க முடியாது என்று எதிர்கட்சிகளின் கேள்விக்கு பெட்ரோலியத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் குறைத்து அறிவித்தன.
எனினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்கவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இதற்கு மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது.
இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது...
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 50 அமெரிக்க டாலர்களாக உள்ளது. எனினும் இந்த விகிதத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது. ஏனெனில் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, மாநில வரிகள் மற்றும் வினியோகஸ்தர் கட்டணம் ஆகியவை மாறாமல் அப்படியேதான் உள்ளது.
எனவே கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் என இதுவரை 25 லட்சம் பேர் விட்டுக்கொடுத்து இருக்கின்றனர். இதே போன்ற ஆதரவு தொடர்ந்தால் விரைவில் ஒரு கோடி என்கிற இலக்கை அடைந்து விடுவோம்.
இவ்வாறு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.