மத்திய அரசு அமைக்க உள்ள 82 மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்திற்கு பூஜ்யம்!
Recommended Video
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள 82 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்துக்கு ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மோடி அரசு பொறுப்பேற்றதுமே, நாடு முழுக்க 58 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைப்பது இலக்கு என அறிவிக்கப்பட்டது.
இந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2ம் கட்டமாக 24 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
82 மருத்துவ கல்லூரிகள்
ஆக மொத்தம் 82 மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகள் எங்கெல்லாம் அமைகிறது என்ற பட்டியலை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமீபத்தில் உறுதி செய்தார்கள்.
தென் மாநிலங்கள் புறக்கணிப்பு
அமைச்சரவை எடுத்த முடிவை சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சார்பில் வெளியிடப்பட்டுல்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ள 82 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகம் உட்பட எந்த தென் மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படவில்லை.
தமிழகத்திற்கு பூஜ்யம்
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 2 எம்.பிக்களை வெற்றி கண்டது. கேரளத்தில் முடியவில்லை என்றபோதிலும், ஆந்திரா, கர்நாடகாவில் பாஜக கணிசமாக வெற்றி பெற்றது. மேலும், கர்நாடகாவுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும் எந்த தென் மாநிலத்திற்கும் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அமோகம்
அதிகபட்சமாக, உத்தரப் பிரதேசத்தில் 13 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 8 மருத்துவ கல்லூரிகள், ராஜஸ்தானில் 7 மருத்துவ கல்லூரிகள், ஜார்கண்ட்டில் 5 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2020-21ம் ஆண்டுக்குள் 82 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பாட்டிற்கு வருமாம்.