தண்ணி இல்லை: ஒருவர் கூட ஓட்டு போடாத கிராமம்
சிர்சா: ஹரியானா மாநிலத்தில் உள்ள சுல்தான்புரியா கிராமத்தில் நடந்த வாக்குப்பதிவின்போது கிராம மக்கள் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ளது சுல்தான்புரியா கிராமம். அந்த கிராமத்தில் மொத்தம் ஆயிரத்து 900 வாக்களர்கள் உள்ளனர். விவசாயத்திற்காக ஒரு கால்வாய் அமைத்துத் தருமாறு அந்த கிராம மக்கள் கடந்த 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.
இதையடுத்து பஞ்சாயத்தை கூட்டி தேர்தல்களை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுல்தான்புரியாவில் இருந்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
சுல்தான்புரியாவில் அமைக்கப்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அதிகாரிகளை தவிர வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் சிலர் கிராம மக்களை சந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் மசியவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வாக்களிக்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்
இது குறித்து சுல்தான்புரியாவைச் சேர்ந்த காலு ராம் கிச்சார் கூறுகையில்,
நிலத்தடி நீர் உப்பாக உள்ளதால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஒரு கால்வாய் கட்டித் தருமாறு கேட்டும் பயனில்லை. சும்மா வாக்குறுதி அளிக்கிறார்களே தவிர செயலில் ஒன்றும் இல்லை. நாங்கள் சட்டசபை தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.